திமுக ஆட்சி ஊழல் நிறைந்தது. ஊழலும் திமுகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று விமர்சித்த ஜே.பி.நட்டா, பாஜகவிற்கு பணியாற்றினால் கட்சிக்கும், உங்கள் இனத்திற்கும், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் பணியாற்றியவர்கள் ஆவீர்கள் என்று குறிப்பிட்டார்.
திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திமுகவும் ஊழலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று விமர்சித்தார். வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டுவது தான் பாஜகவின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், ஈரோடு மாவட்ட கட்சி அலுவலகங்களை காணொளி காட்சி மூலம் திருப்பூரில் இருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார். இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜே.பி.நட்டா, பழமை வாய்ந்த தமிழ் கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டான இங்கு இருப்பதில் மகிழ்ச்சி. திருவள்ளூவர் வாழ்ந்த பூமியை வணங்குகிறேன். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனார் வார்த்தைகளை கொண்ட கலாச்சாரத்தின் அடையாளமான தமிழகத்திற்கு வந்துள்ளேன். சில கட்சிகள், தலைவர் இல்லங்களில் நடைபெறும். தலைவர்கள் போனால் கட்சி காணாமல் போய் விடும். ஆனால் பாஜகவில் யார் வேண்டுமானாலும் வரலாம் போகலாம். குறிக்கோளும் கட்சியும் நிலைத்திருக்கும். அதன் அடிப்படையில் 720 கட்சி அலுவலகங்கள் திறக்க முடிவு செய்து 473 அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. \1\6தமிழகத்தில் இன்று 4 அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 12 அலுவலகங்கள் விரைவில் திறக்கப்படும். இது அலுவலகம் அல்ல பணிமனை என்று தெரிவித்தார்.