பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அடுத்தகட்டமாக போராட்டம் நடத்துவது குறித்து திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணா அறிவாலயம் வந்துள்ளார். மக்களை பாதிக்கும் வகையில் பல மடங்கு உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 29ம் தேதி திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்ற மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சிகள் போராட்ட அறிவிப்பு வெளியிட்ட ஜனவரி 28ம் தேதி குறைந்த அளவில் கட்டணத்தை குறைத்து அரசு அறிவிப்பை வெளியிட்டது.
எனினும் இந்த கட்டண குறைப்பு என்பது கண்துடைப்பு என்றும் முழுவதும் பஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்தகட்டமாக போராட்டத்தை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
MDMK Chief Vaiko at Anna arivalayam after 12 years to participate in all party meeting conducted by DMK to decide about the next protests for bus fare hike and NEET, Cauvery issue.